Inaiya Sevaigal: கொரோனா விலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிசி வெளியிட்டுள்ள தற்காப்பு வழிகள்

கொரோனா விலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிசி வெளியிட்டுள்ள தற்காப்பு வழிகள்


நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமான முறையில் வாழ்வது.

• உங்களின் கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிரிமிநாசினியை பயன்படுத்தியோ சுத்தம் செய்யுங்கள். இவை, உங்களின் கைகளில் வைரஸ் இருந்தால், அவற்றை கொன்றுவிடும்.

• உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.

நோய் பரவலை தடுப்பது எப்படி?

• உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் வந்தால், கைக்குட்டை/டிஷ்யு பேப்பரை பயன்படுத்துங்கள். அப்போதைய சமயத்தில் கைவசம் அவை இல்லை என்றால், உங்களின் மணிக்கட்டை வைத்து மறைத்துகொள்ளுங்கள்.

• பயன்படுத்திய டிஷ்யு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். இது, வைரஸ் நிறைந்துள்ள அந்த காகிதத்தால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

• இதே காரணத்திற்காகவே, மக்களை 2மீ சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

• பல இடங்களில், அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்களை வெளியே போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்னை உள்ளவர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.

• அப்படி நீங்கள் வெளியே சென்றுள்ளீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்வதை விடுத்து, 'பாதுகாப்பான முறையில் வரவேற்றுக் கொள்ளுங்கள்' என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, கை அசைத்தல், தலை தாழ்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.

முகமூடி மற்றும் கையுறைகள் பயனளிக்கின்றனவா?

நீங்கள் கடைகளில் வாங்கும் சாதாரணமான முகக் கவசங்கள் உங்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்காது. ஏனென்றால், அவை பெரும்பாலும் மிகவும் வலுவிழந்து இருக்கும், கண்களை மறைக்காது, பல நாட்கள் நீடித்து உழைக்காது. ஆனால், நோய்த்தொற்று உள்ள ஒருவரின் உமிழ்நீர் மற்றவர்கள் மீது பட்டு, அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவை உதவும்.

நினைவில்கொள்ளுங்கள், இந்த சார்ஸ்-சிஓவி-2 வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலரிடம் அறிகுறிகள் தெரிவதில்லை. எனவே, பொதுவெளியில், முகமூடி அணிந்து செல்வது என்பது, பொதுவாகவே நமக்கு நன்மை அளிக்கும் ஒரு விஷயம்தான்.

நீங்கள் கையுறை அணிந்தாலும், கோவிட்-19 நோயால் தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றே உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் கைகளில் வைரஸ் இருந்து முகத்தைத் தொட்டால், அவை நிச்சயமாக உள்ளுக்குள் போகும்.

கையுறைகளை அணிவதைவிட, சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவதால், நோய்த்தொற்றிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

மனநிலையை சிறப்பாக பார்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

இது அனைவருக்குமே சற்று கடினமான காலம் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இத்தகைய சூழல், உங்களை வருத்தமாகவும், தனிமையாகவும், குழப்பமாகவும், கோபமாகவும் உணரச்செய்யலாம்.

உங்களின் மனநிலையை சரியான முறையில் வைத்துக்கொள்ள பிரிட்டனின் மத்திய சுகாதாரச்சேவை சில குறிப்புகளை அளித்துள்ளன:

• அலைப்பேசி அல்லது வீடியோ கால் சேவை மூலம், உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பில் இருங்கள்.

• உங்களின் மனதை வருத்தமடைய வைக்கும் விஷயங்கள் குறித்து பிறரிடம் பேசுங்கள்.

• பிறரின் கவலை/உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயலுங்கள்.

• இந்த ஊரடங்கால் நமது வாழ்விற்கு வந்திருக்கும் புதிய நடைமுறைகளை கையாள தயாராகுங்கள். உணவிற்கான பொருட்களை வாங்க கடைக்கு செல்லுதல், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பது ஆகியவற்றை செய்ய உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

• உங்களின் உடல்நிலை மீது கவனம் கொள்ளுங்கள். முறையே உடற்பயிற்சி செய்யுங்கள்; சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்; தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை ஒதுக்கி வையுங்கள்.

• சரியான வழியில் இந்த பெருந்தொற்று குறித்த தகவல்களை பெறுங்கள். அதேபோல, கொரோனா தொற்று குறித்து ஒரு நாளுக்கு எவ்வளவு மணிநேரம் செல்வழிக்கிறீர்களை என்பதையும் கவனித்தில் கொள்ளுங்கள்.

• கடினமான சூழல்களை எதிர்கொள்ளுங்கள். உங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழல்களை உங்களால் எதுவுமே செய்ய முடியாது; அதை ஏற்றுக்கொள்ள பழகுகள். ஆனால், கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களின் மீது கவனத்தை செலுத்துங்கள்.

• உங்களுக்கு விருப்பமான விஷயங்களை செய்யுங்கள். 'பிடித்தவை' என்ற பட்டியல் மிகவும் சிறியதாக இருந்தால், புதியதாக ஒரு விஷயத்தை சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

• தற்போது நடப்பவை மீது கவனம் கொள்ளுங்கள். இப்போது உலகில் நடந்து வரும் அனைத்தும் தற்காலிகமானதே என்பதை மறக்காதீர்கள்.

• உங்களின் தூக்கத்தில் கவனம் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் தூங்கி எழுந்துகொள்ளும் வழக்கத்தை கொண்டுவாருங்கள். தூங்குவதற்கு முன்பு, கைபேசியில் மூழ்காதீர்கள்; காபி போன்ற பானங்களை பருகாதீர்கள்.

மேலும் விரிவான விபரங்களுக்கு

https://www.bbc.com/tamil/science-53406321

No comments:

Post a Comment